இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் கெளரவ் பேசும் போது, “எல்லாரையும் நான் டயர்ட் ஆக்குவேன்.. இவன் என்னையே டயர்ட் ஆக்கிட்டாண்டா” என்று என் குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார் என்னிடம் கூறினார். நான் உடனே கல்யாணுக்கு போன் செய்து நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்று சொன்னேன். என் பையனும் பொண்ணும் சந்தானம் சாரின் மிகப்பெரிய ரசிகர்கள். அவர்கள் இது போன்ற காமெடிப் படம் சந்தானம் அங்கிளை வைத்து பண்ணுங்கள் என்று என்னை நச்சரிக்கிறார்கள். அதற்காகவாவது கண்டிப்பாக அவருடன் இணைந்து படம் செய்ய விரும்புகிறேன். வெறும் இடுப்பைக் காட்டியே எல்லோரையும் கட்டிப் போட்டுவிட்டார் ஆனந்த்ராஜ் சார். அவரை மீண்டும் என்னுடைய படத்தில் வில்லத்தனம் செய்யும் கொடூர வில்லனாக பார்க்க ஆசை. என்னுடைய படத்தில் அது நடக்கும் என்று நினைக்கிறேன். ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் மெலடி எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். எந்தப் படத்தை எப்பொழுது வெளியிட வேண்டும் என்கின்ற வியாபார நுணுக்கம் தெரிந்தவர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அவரோடு இணைந்து என்னுடைய தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
சக்திவேல் ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, “பேய்களுக்கு பிடித்த ஹீரோ சந்தானம் சார். சந்தானம் சார் பேய் படம் இந்த இரண்டும் இணைந்தாலே படம் ஹிட். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் எந்தமாதிரி எதிர்பார்ப்பில் வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அந்த எதிர்பார்ப்பை கண்டிப்பாக இந்த 80ஸ் பில்டப் திரைப்படம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மற்றும் தனஞ்ஜெயன் இருவருக்கும் 2024ம் வருடம் மிகப்பெரிய வருடமாக இருக்கும். ஏனென்றால் தெலுங்கில் 6 புராஜெக்ட்கள், ஹிந்தியில் இரண்டு புராஜெக்ட்கள், கன்னடத்தில் ஒரு புராஜெக்ட் என்று தொடர்ச்சியாக பல படங்களின் ஆடியோ வெளியீடு, வெற்றி விழா கொண்டாட்டங்கள் இருக்கும். அதற்கு இப்பொழுதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும் போது, “பொதுவாக காமெடிப் படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிகவும் கடினம். நான் அதை சில வருடங்கள் தவிர்த்து வந்தேன். த்ரில்லர், ஆக்ஷன் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து ஒரு கட்டத்தில் எனக்கு ஒருவித சைக்கோ மனநிலை வந்துவிட்டது. இனி துணிந்து ஒரு காமெடி படத்திற்கு இசை அமைக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்தேன். இப்படத்திற்கு இசை அமைத்தது பெரிய அனுபவம். இயக்குநர் கல்யாண் காமெடி படத்திற்கு இசை அமைப்பதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் முத்தமிழ், என்னமங்களம் பழனிச்சாமி மற்றும் வாமனன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று பேசினார்.