”காமெடி கதைகளுக்கான ஹீரோக்கள் இல்லை என்னும் வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” – ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு
நடிகர் ஆனந்த்ராஜ் பேசும் போது, “இப்படத்தின் தயாரிப்பாளர் என் தம்பி ஞானவேல்ராஜா சார் மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் தனஞ்ஜெயன் சார் இவர்களின் முயற்சியால் இந்த “80ஸ் பில்டப்” திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி இருக்கிறது. சந்தானம் சாருக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். ஒரு நல்ல காம்பினேஷன் எங்களுக்குள் இருக்கிறது. இயக்குநர் கல்யாண் உடன் குலேபகாவலி படத்தில் பணியாற்றினேன். ‘ஜாக்பாட்’ படத்தில் அவர் பணியாற்றுவதைப் பார்த்து ஜோதிகாவிற்கு வியர்த்துவிட்டது. கையில் சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டே ஆக்ஷன் என்று கூறுவார். அவரிடம் ஒரு முதிர்ந்த இயக்குநருக்கான பக்குவம் உண்டு. இப்பொழுதுள்ள இயக்குநர்களில் சிலருக்கு மூன்று கேமராக்களை கொடுத்தால் எங்கு அதை வைப்பது என்றே தெரியாது. இப்படத்தில் பல காட்சிகள் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டது. அந்த மொத்த காட்சிக்குமான விசயங்களை மனதில் வைத்துக் கொண்டு நடிப்பது என்பது மிகவும் சிரமம். எதை உங்களிடம் இருந்து பறித்தாலும் உங்களுடைய திறமையை உங்களிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. எப்படி படிப்பு என்பது உங்களது சொத்தோ அது போல் திறமை என்பது உங்களது சொத்து அதை யாரும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது. நான் கொலை செய்வதற்கு எத்தனையோ கெட்டப் போட்டு இருக்கிறேன். ஆனால் என்னை கொலை செய்வதற்கு கெட்டப் போட்டவர் இயக்குநர் கல்யாண் தான். ஜாக்பாட் படத்தின் போதே மிகவும் யோசித்தேன், மானஸ்தன் மானஸ்தி இது வொர்க் அவுட் ஆகுமா என்று. இந்த பெண் வேடம் என்பது ஒரு சாஸ்திரம் என்று நினைக்கிறேன். இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி, அஜீத், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் இப்படி பலரும் அந்த கெட்டப் போட்டு இருக்கிறார்கள். அது ஹிட் ஆகியிருக்கிறது. நானும் ஜாக்பாட் திரைப்படத்தின் மூலம் அது போன்ற ஒரு கதாபாத்திரம் செய்தேன். இப்படத்தில் இன்னொரு ரகசியம் இருக்கிறது. இப்படத்தில் நான் இன்னொரு கதாபாத்திரமும் செய்து இருக்கிறேன். என் ஒரிஜினல் கெட்டப். அது டிரைலரில் அக்கதாபாத்திரம் காட்டப்படவில்லை. அது சஸ்பென்ஸ். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பை வெல்ல எங்கள் தயாரிப்பு மற்றும் படக்குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள். நவம்பர் 24ல் எங்களுக்கான கோப்பையை நாங்கள் வாங்க இருக்கிறோம். மிகவும் ஜாலியான திரைப்படம். தியேட்டரில் வந்து பாருங்கள். இது தவிர்த்து தயாரிப்பாளர்கள் தரப்புக்கு ஒரு வேண்டுகோள். ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை வர்ணனையாளராக பயன்படுத்துவதைப் போல் மூத்த நடிகர் நடிகைகளை திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, வணக்கம். “ என்று பேசினார்.
இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் பேசும் போது, நான் பிறர் இயக்கத்தில் நடிக்க செல்லும் போது இவர்களிடம் இருந்து என்ன கத்துக் கொள்ள முடியும் என்று பார்ப்பேன். அதைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றும் என்றால், நாமும் இவர்களைப் போல் நிதானமாக 10 பதினைந்து டேக் எடுக்க வேண்டும், மெதுவாக காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் கல்யாண் என்னிடம் கதை சொல்லியவுடன் எப்படியும் இதை எடுக்க 30 நாள் ஆகும் என்று நான் நினைக்க, அவர் 5 நாள் போதும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் மொத்த காட்சியும் ஒரே டேக்கில் படமாக்கப்பட இருக்கிறது என்றார். நான் அது நாடகத்தனமாக இருக்குமே என்று கேட்க, இல்லை சார் நான் கட் செய்து கட் செய்து காட்டிவிடுவேன் என்றார். அங்கு போய் பார்த்தால் பல்வேறு கேமராக்களை வைத்துக் கொண்டு ஒரு ரியாலிட்டி ஷோ சூட் செய்வதைப் போல் படம் பிடித்துக் கொண்டு இருந்தார். ஒரு இயக்குநருக்கு எடிட்டிங் அறிவு இருக்க வேண்டும். அது இருந்தால் தான் அவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப். எல்லா இடங்களிலும் கேமராவை வைத்துவிட்டால் லைட்டை எங்கு தான் வைப்பது. அந்த தலைவலியை எல்லாம் மிகச்சிறப்பாக கையாண்டது ஒளிப்பதிவாளர் ஜேக்கப் தான். அவருக்கு வாழ்த்துக்கள். சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி கதைக்கான ஹீரோக்கள் இல்லை என்கின்ற வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார். சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் கூட அதில் தான் என்ன தவறு செய்தேன், அதை எப்படி திருத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற புரிதல் அவருக்கு சிறப்பாக இருக்கிறது. கவுண்டமணி, நாகேஷ் போன்றோர் கூட நாயகனாக நடித்துவிட்டு மீண்டும் காமெடி செய்ய போய்விட்டனர். ஆனால் சந்தானம் தான் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். மேலும் இயக்குநருடனான புரிதல் அவருக்கு சிறப்பாக இருக்கிறது. அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற என் வாழ்த்துக்கள். எல்லோரும் பேசுவதைப் பார்த்தால் ஆனந்தராஜை அயிட்டமாகவே மாற்றி விடுவார்கள் போல. ஆனந்த்ராஜ் ஆஃப் ஸ்கிரீனில் தான் அதிகமாக கமெண்ட் அடிப்பார். அவர் வில்லனாக நடித்த காலகட்டத்தை விட வெரைட்டியான கதாபாத்திரங்கள் இப்பொழுது தான் கிடைக்கத் துவங்கியிருக்கிறது. சுவாமிநாதனைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் மேடை நாடக நடிகர். இப்படத்தில் எனக்கு மாடர்ன் லோக்கல் எமன் கதாபாத்திரம். ஒரு கைலி மற்றும் டிசர்ட்டை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டனர். நான் வலுக்கட்டாயமாக கதாயுதம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டேன். விழாவின் நாயகன் ஜிப்ரான் மெலடி கிங். அவரின் மெலடி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.