நான் சாதனை பெண்மணி.கவிஞர்.மதிப்புறு முனைவர்.ப.நித்யா. ஆசிரியர் மற்றும் சமூக பணியாளர். அன்னை அறக்கட்டளை நிறுவனர் வேளச்சேரி சென்னை.
என்னைப் பற்றிய தொகுப்பு
“வந்தோம், சென்றோம் என்றில்லாமல் நமக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்”
– சாதனைப் பெண்மணி நித்யா.
“இந்த உலகில் நாமும் வந்தோம், ஏதோ வாழ்ந்தோம், சென்றோம் என்றில்லாமல் இறக்கும்முன் நமக்கான ஒரு சிறு அடையாளத்தையேனும் உருவாக்க வேண்டும்; நம்மால் முடிந்தவரை நான்கு பேருக்கு முன்னுதாரமாக வாழ வேண்டும்; அந்த இலக்கை நோக்கித்தான் எனக்கான பாதையை வகுத்து செயலாற்றி வருகிறேன்” பேசும்போதே தன்னம்பிக்கை மிளிர்கிறது நித்யா அவர்களிடம்.
நித்யா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது, திருமணத்திற்குப் பிறகு சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணி அனுபவம் பெற்றவர். சரி, நேர்காணல் செய்யுமளவு அப்படி என்ன சிறப்பு இந்த நித்யாவிடம் என்று தானே நினைக்கிறீர்கள்… நித்யா, பன்முகத் திறமை கொண்ட ஒரு சாதனைப் பெண்மணி. 12 தனி நபர் உலக சாதனைகள், 10 குழு உலக சாதனைகளில் பங்கெடுப்பு, 3 கின்னஸ் சாதனைகள் என்று அவர் கூறிய வண்ணமே பல பேருக்கு முன்னுதாரணமாக சாதனை வரலாற்றில் தொடர்ந்து தன் பெயரை பதிவு செய்து வருபவர்.
அது மட்டுமின்றி மரம் நடுவது, இயலாதவர்களுக்கு உணவு வழங்குதல், பெண்களின் முன்னேற்றத்திற்கு இயன்றதைச் செய்தல் என்று சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தன்னுடைய இறப்பிற்கு பின்னும், இந்த சமூகத்திற்கு பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முழு உடல் தானத்திற்காக அரசாங்கத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார். புற்று நோயாளிகளுக்காக இரண்டு முறை முடி தானம் செய்துள்ள இவர், தொடர்ந்து ரத்த தானமும் செய்து வருபவர். “அன்னை அறக்கட்டளை”யின் நிறுவனரான இவர், சென்னை வேளச்சேரியில் இத்தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரின் இத்தகைய தன்னலமற்ற சமூக சேவைகளைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து உள்ளது. சிறந்த ஆசிரியர் விருது, நல் ஆசான் விருது, சிங்கப்பெண் விருது, வைர மங்கை விருது, வீரமங்கை விருது என்று இவரது வீடு விருதுகளால் நிரம்பியுள்ளது. “வீட்டில் இருந்து கொண்டு, நம்மால் அப்படி என்ன சாதனை செய்துவிட முடியும்” என்று இயலாமையில் துவண்டு கிடக்கும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு வழிகாட்டும் நித்யாவுடனான இந்த நேர்காணலைத் தொடர்வோம்.
வணக்கம் நித்யா.. இதுபோன்று சாதனைகள் புரிய வேண்டுமென்ற எண்ணமும், சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்ற சிந்தனையும் எவ்வாறு ஏற்பட்டது?
நான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனியார் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். இந்த கொரோனாவிற்குப் பிறகு அந்த பணியை விட்டுவிட்டு, முழுக்க முழுக்க சமூகப் பணிகளில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். எனது குழந்தைகளுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் நான் என்னையே சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டேன். ஏனென்றால், என்னைப் பார்த்துதான் எனது குழந்தைகளும் ஒன்றைச் செய்வார்கள். நான் நினைத்தவாறே என்னுடைய குழந்தைகள் என்னைப் பார்த்து மரம் நடுதல், உணவு வழங்குதல் போன்ற சமூகப் பணிகளில் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். என்னுடைய பத்து வயது மகன் அனிஷ், பத்து வயதில் நாற்பது உலக சாதனைகள் புரிந்துள்ளார். மூன்று வயது மகள் ஜான்வி பதிமூன்று உலக சாதனைகள் படைத்துள்ளார். ஒரு தாயாக, என் பிள்ளைகள் எவ்வாறு வளர வேண்டும் என்று நினைத்தேனோ அவ்வாறே அவர்கள் வளர்ந்து வருகிறார்கள்.
இதுதவிர, நானே எதிர்பார்க்காத விதமாக இப்பொழுது பல பெண்களுக்கு, நான் முன்னுதாரணமாக திகழ்கிறேன். என்னைப் பார்த்து நிறைய பெண்கள் “நாங்களும் உங்களைப் போன்று சாதனை படைக்க ஆசைப்படுகிறோம்” என்று கேட்கிறார்கள். அவர்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்களை தந்து, முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். அதேபோன்று, ஆசிரியர் பணியில் இருக்கும் போதெல்லாம் எனக்கு இந்த மாதிரியான சாதனைகள் புரிவது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. பணியை விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் போதுதான், நம்முடைய வாழ்வு இப்படியே முடிந்து விடக்கூடாது, ஆக்கப்பூர்வமாக ஏதாவது ஒன்றைச் செய்து சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த எண்ணம்தான் என்னை இதுவரை வழி நடத்திக் கொண்டு வந்திருக்கிறது.
பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் பணியை விட்டுவிட்டதால், படித்த படிப்பு வீணாவதாக தோன்றவில்லையா?
நிச்சயமாக இல்லை. நான் கணிதத்தில் எம்.எட்., எம்.பில் முடித்துள்ளேன். நான் படித்த படிப்பு இந்த சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமாக பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, என்னைத் தேடி வரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வருகிறேன். ஆதலால், பணிக்குச் செல்லாவிட்டாலும் நான் கற்றக் கல்வியை நான்கு பேருக்கு பயனளிக்கும் விதமாகத்தான் பயன்படுத்தி வருகிறேன். மேலும், இனிவரும் தலைமுறைகளுக்கு முடிந்தவரை இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக என்னால் முடிந்தவரை இணைய வழியிலும், நேரடியாகவும் அவர்களுக்கு இலவசமாக பாடங்கள் எடுத்து வருகிறேன்.
என்ன மாதிரியான செயற்பாடுகளுக்காக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளீர்கள்?
தொடர் ஓட்டப் பந்தயம், ஒரு அமைப்பு முன்னின்று நடத்திய ஆசிரியர் தின நிகழ்வில் பங்கேற்றது, சென்னையில் நடந்த மாபெரும் பரதநாட்டிய நிகழ்வில் 12,345 மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டது என்று மூன்று கின்னஸ் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்து அதற்காக பதக்கங்களும், சான்றிதழும் பெற்றுள்ளேன். இதனால் மூன்று கின்னஸ் சான்றிதழ்களை பெற்ற ஒரே பெண்மணி என்ற சிறப்பும் உண்டு. 10 கிலோ எடை ‘டம்பில்’ பெண்கள் பிரிவில், கண்களை கட்டிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 40 முறை எடுத்ததால், “எவரெஸ்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில்”, அங்கீகரித்து, பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இன்னும் பல சாதனைகளுக்காகவும், சமூகத் தொண்டிற்காகவும் இலங்கை, எத்தோப்பியா போன்ற நாடுகளில் பல்வேறு அமைப்புகள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது.
மேலும், என்னால் முடிந்தவரை பல்வேறு விசயங்களைப் பற்றி இந்த சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறேன். “முழு உடல் தானம் செய்யுங்கள். நாம் இறந்த பிறகும் நம்முடைய உறுப்புகள் இந்த சமூகத்திற்கு பயன்பட வேண்டும்” என்ற விழிப்புணர்வையும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறேன். அதேபோன்று, என்னிடம் பயின்று வரும் நிறைய மாணவர்களையும் உலக சாதனைகள் செய்ய ஊக்குவித்து வருகிறேன்.
நீங்கள் கவிஞர் அல்லவா? அதைப்பற்றி கூறுங்கள்?
ஆம். கவிஞராக நிறைய கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன். அதுமட்டுமின்றி, பல்வேறு கவிதை குழுக்களை ஒருங்கிணைத்து, எண்ணற்ற புதிய கவிஞர்களையும் உருவாக்கியுள்ளேன். எண்பது கவிஞர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் கவிதை தொகுப்பு படைத்து, சாதனை புரிந்து அதற்காகவும் பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றுள்ளோம். இவ்வாறு கவிதைகள் எழுதுவதால் நமது தாய் மொழியாகிய தமிழின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடிவதாக ஒரு நிறைவு ஏற்படுகிறது. அதனால், முழு ஈடுபாட்டுடன் இந்தப் பணியையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறேன்.
இந்த மாதிரி சமூகப்பணி ஆற்றுவதற்கு வீட்டினரின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது?
தொடக்கத்தில், வீட்டில் கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்தது. படிப்படியாக என்னுடைய செயற்பாடுகளைப் பார்த்து எனது கணவர் சிவா ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினார். “நல்லதுதானே செய்கிறார். அதைப் பார்த்து பிள்ளைகள் நல்ல செயல்களைத்தானே கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு, மனிதநேயமும் வளர்கிறது” என்று நாளடைவில் முழுஆதரவு தெரிவித்தார். இப்பொழுது அவர்களும் சேர்ந்து, சாதனைகளும், சமூகப் பணிகளும் செய்யத் தொடங்கியுள்ளார்கள். இதனால், சாதனைக் குடும்பம், சமூகப் பணியாளர்கள் என்ற பெயரும் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் அனைவருக்கும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.(India -Post)
உங்கள் அனுபவத்திலிருந்து சக பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
எந்த பெண்ணுமே முதலில் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. ‘நாம் ஏன் இப்படி இருக்கிறோம்” என்று ஒரு மனநிலைக்கு போகாமல், நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில்தான் நமது சிந்தனை இருக்க வேண்டும். கிடைக்கும், ஒரு சிறிய வாய்ப்பை கூட வீணாக்காமல், அதைவைத்து நாம் எப்படி முன்னேற வேண்டும் என்பதை நோக்கித்தான் நமது பயணம் இருக்க வேண்டும். எடுத்தவுடனே, யாருக்கும் சாதனைகள் என்பதெல்லாம் கைகூடி விடுவதில்லை. என்னுடைய குடும்பத்தில், நான்தான் முதன் முதலாக இந்த மாதிரியான முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன். எனக்கும், இதையெல்லாம் எடுத்துச் சொல்ல யாரும் கிடையாது. இங்கு எல்லாமே ஒரு அனுபவம்தான். நாம் ஒருவர் துணிந்து இறங்கினால், நம்மைப் பார்த்து பல பெண்கள் தன்னம்பிக்கையுடன் வெளியே வருவார்கள். அந்த இடத்திற்குதான் நான் என்னைத் தயார் படுத்தி வருகிறேன். விடா முயற்சியும், பயிற்சியும் இருந்ததால்தான் என்னுடைய கனவு, நனவாகும் சாத்தியம் கிடைத்தது. ஆகவே, நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் அனுபவமாக எடுத்துக் கொண்டு, தேடித்தேடி புதிய விசயங்களை கற்றுக் கொண்டால் யாரும் ஒரு நாள் சாதனையாளர் ஆகலாம். வயது, திருமணம் என்பதெல்லாம் அதற்கு ஒரு தடையேயில்லை. முதலில் முயற்சியுங்கள்.. அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.. ஓர் நாள் நிச்சயம் நினைத்த இலக்கை அடைவீர்கள்.
என்னுடைய கருத்துகளை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி, வணக்கம்.