தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா
இலங்கையின் மலையகப் பகுதிகளின், தேயிலைக் காடுகளிலும், மற்ற கடுமையான பகுதிகளிலும், வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து, ஏராளமான மக்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திலே குடியமர்த்தினார்கள். பாரதத்திலிருந்து புலம் பெயர்ந்து இலங்கைக்குச் சென்ற, நம் தமிழ் வம்சாவழியினர், கடந்த இருநூறு ஆண்டுகளாக, கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கைவிடாமல், தொடர்ந்து பின்பற்றி அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.
இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த, இந்தக் குடிப்பெயர்ச்சியை நினைவு கூறும் வகையில், அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பெருங்குடி மக்களை, போற்றும் வகையில், ஒரு நினைவு சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிடுகிறது. உலர்ந்து போகாமல் உறவுகளை ஈரப்படுத்தும், இடப்பெயர்வைப் போற்றும், இதுபோன்ற நிகழ்வு, இந்தியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் இதுவரை நடைபெற்றது இல்லை.
நாளை புது டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள், நினைவு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட இருக்கிறார்கள். அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும், இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தின் ஆளுநர், மேதகு செந்தில் தொண்டமான் அவர்கள் அஞ்சல் தலையை பெற்றுக் கொள்கிறார்கள்.
தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் இந்த அரிய விழாவிலே பாஜகவின் தமிழ்மாநிலத் தலைவர் திரு.கே.அண்ணாமலை அவர்கள் வரவேற்புரை நல்க இருக்கிறார். இவ்விழாவிலே மத்திய இணை அமைச்சர் திரு.எல் முருகன் அவர்கள், திரு.விஜய் சௌத்தேவாலே அவர்கள், திரு.பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள், திரு H.ராஜா அவர்கள், திரு வி பி துரைசாமி அவர்கள், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவின் நிறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணியின் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அவர்கள் நன்றியுரை வழங்குகிறார்கள்.
பாரதப் பிரதமரின், பல்வேறு நலத்திட்டங்களால் அங்குள்ள, தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது. பாரதமும், இலங்கையும் உணர்வுகளாலும், உறவுகளாலும் ஒன்றிணையும் இது போன்ற நிகழ்வுகள் வருங்கால சமுதாயத்தை வளர்க்க உதவும்.