தீபாவளி முடிந்தவுடன் பொது தேர்வு தேதி அறிவிக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-3 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு நேற்று நேரடிக் கலந்தாய்வு மூலம் இடங்கள் தெரிவு செய்யப்பட்டது
இதைத்தொடர்ந்து இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2.29.905 ஆசிரியர்கள் பணியாளர்களுக்கான மற்றும் 29,909 ஆசிரியரல்லாப் பலன் சார்ந்த கோரிக்கைகளை ஏதுவாக “பணியாளர்களுக்கான குறைதீர் புலம்” (Staff Grievance Redressal Cell Portal & App) என்ற செயலியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், மாநிலத் திட்ட இயக்குநர் மருத்துவர் மா. ஆர்த்தி கலந்து கொண்டனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,
பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பணிகளின் தற்போதைய நிலை குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக 2.29.905 ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை விண்ணப்பிக்க ஏதுவாக பணிப் இணையதளம் மூலமாகவே “பணியாளர்களுக்கான குறைதீர் புலம்” (Staff Grievance Redressal Cell Portal & App) தொடங்கி வைக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான ஆலோசனைகளும் இந்த கூட்டத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கக் கூடிய நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. மேலும் தீபாவளி முடிந்தவுடன் பொது தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கூறினார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை குறித்து முதன்மை செயலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அவை ஏற்றுக்கொள்ளும் வகையில் வழி இருந்தால் அதை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.