இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”.இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை 2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்லப் போறோம் கல்யாண் என்று தான் பதிவு செய்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் வந்த படங்களில் எனக்கு கதை சொல்லப் போறோம் திரைப்படம் மிகவும் பிடிக்கும். அதுபோல் ஜாக்பாட், குலேபகாவலி படத்தில் வரும் அந்தப் பாடலை யாரும் மறந்திருக்க மாட்டோம். இயக்குநர் கல்யாணின் காமெடி சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இப்படத்தின் படப்பிடிப்பை 15 நாட்களில் முடித்துவிட்டார், 18 நாட்களில் முடித்துவிட்டார் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகளைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவை எதுவும் உண்மையில்லை. ஒரு குறிப்பிட்ட டாக்கி போர்ஷனை மட்டும் அவர் 15 நாட்களில் முடித்தார் என்பதே உண்மை. ஆனால் உண்மையாகவே அவரின் உழைப்பின் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது. மல்டி கேமரா செட்டப்பை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக ஒரு படப்பிடிப்பை முடித்துவிட முடியுமா..? என்று எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. இப்பொழுது கல்யாண் இயக்கத்தில் எனக்கும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த நாயகன் சந்தானத்தை வைத்துக் கொண்டு 80’s பில்டப் படத்தை முடித்திருக்கிறார். எப்பொழுதுமே சந்தானம் பேய்-உடன் முட்டுக் கொடுத்தால் அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும். இப்படத்தில் அவர் மூன்று ஆவிகளுடன் முட்டுக் கொடுத்து நடித்திருக்கிறார். இது மிகவும் கஷ்டம், இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைத்துக் கொண்டு நகைச்சுவையாக நடிப்பது சவால் நிறைந்தது. இதை எப்படி இவ்வளவு எளிதாக சந்தானம் செய்து முடிக்கிறார் என்று நான் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவேன். மேலும் சந்தானம் ஒரு சாவு வீட்டில் இருப்பது போல் அமையும் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெறும். A1 திரைப்படம் உங்களுக்கு நினைவு இருக்கும். சுமார் 5 வருடங்களுக்கு முன்பாக அப்படத்தை நான் பலாஸோவில் பார்த்தேன். A சென்டர் ஆடியன்ஸ் கூட மிகவும் ரசித்த திரைப்படம் அது. அப்படத்தின் வெற்றியைப் போல் 80’s பில்டப் படத்தின் வெற்றியும் அமையும் என்று நம்புகிறேன். சந்தானம் காமெடியில் கலக்கும் திரைப்படங்கள் எதுவுமே சோடை போனதில்லை. மேலும் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சின்ன புரட்சி தலைவர் ஆனந்த்ராஜ் ஒரு கவர்ச்சிக் கன்னியாகவே மாறி வளவளப்பான இடுப்பைக் காட்டி வசீகரிக்கிறார். அந்த இடுப்பை பார்க்கும் போதே தொட வேண்டும் போல் இருக்கிறது. இன்னும் பல்வேறு காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதைப்படி நாயகன் சந்தானம் கமல் ரசிகர், அவரின் தாத்தா ரஜினி ரசிகர் என்று வித்தியாசமாக கதையை அமைத்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர். இப்படம் நவம்பர் 24ல் திரைக்கு வருகிறது. இப்படம் இயக்குநர் கல்யாண் அவர்களுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன். படத்தில் நடித்திருக்கும் பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை வாங்கி வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கும், இசை உரிமத்தை பெற்றிருக்கும் ஜங்லி மியுசிக் பாஸ்கர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். என்று பேசினார்.
இயக்குநர் கல்யாண் பேசும்போது, “இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நாளைய இயக்குநர் சீசனில் இருந்து வெளிவந்த உடனே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் தான். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது. எல்லோருமே நான் வேகமாக படப்பிடிப்பை முடித்து விடுகிறேன் என்று பேசினார்கள். ஆனால் அது என் தனிப்பட்ட ஒருவனால் சாத்தியமான விசயம் அல்ல. என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் ஒத்துழைத்ததால் தான் சாத்தியமானது. அவர்களுக்கு என் நன்றிகள். நான் இந்தக் கதையை சந்தானம் சாருக்காகவே தான் உருவாக்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காக காத்திருந்தேன். இடையில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. இருப்பினும் இப்பொழுது திரைப்படம் முழுமையடைந்து வெளியாக இருக்கிறது. வாய்ப்பளித்த சந்தானம் சாருக்கு நன்றி. பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்..” என்று பேசினார்.