
மகளிர் உரிமை மாநாடு
HIGHLIGHTS : சென்னையில் அக்.14-ல் ‘மகளிர் உரிமை மாநாடு’ குறித்து கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம்

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி, திமுக மகளிர் அணி முன்னெடுக்கும் ‘மகளிர் உரிமை மாநாடு’ திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அக்டோபர் 14ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என திமுக துணைப் பொதுச் செயலாளரும் – நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி அறிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் ‘மகளிர் உரிமை மாநாடு’ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (29/09/2023) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி கனிமொழி கருணாநிதி எம்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைக் கழக செய்தி தொடர்பு அணித்

தலைவர் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் எம்.பி), திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், திமுக மகளிர் அணித் செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி, திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் (எம்.எல்.ஏ) மற்றும் திமுக மகளிர் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், கட்சியின் மகளிர் அணி சார்பில் வருகின்ற 14.10.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.