கருமேகங்கள் கலைகின்றன படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குனர் லெனின் கொடுத்த ஆலோசனை
செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி உதயகுமார், பிரமிட் நடராஜன், அதிதி பாலன், மஹானா சஞ்சீவ், விபின்லால், நிஜந்தன், பேபி சாரல், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், படத்தொகுப்பாளர் லெனின், கலை இயக்குனர் மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எடிட்டர் லெனின் பேசும்போது,
“இந்த படத்தில் எல்லோருமே கிழவர்களாக இருக்கிறார்கள்.. என்னுடைய படத்தொகுப்பை அப்போது யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது என்னை தேடி வருகிறார்கள். இந்த படத்தின் படத்தொகுப்பை முடித்து டப்பிங்கிற்கு அனுப்பும்போது கிட்டத்தட்ட ஐந்தே கால் மணி நேரம் படம் இருந்தது. பேசாமல் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் அல்லது இரண்டு இடைவேளைகள் விட்டு படத்தை வெளியிடலாம் என்று கூட கூறினேன்.அடுத்ததாக பாரதிராஜா இயக்கவுள்ள படத்திற்கு நான் தான் படத்தொகுப்பு செய்வேன். இன்றைய இளைஞர்கள் இப்படி படம் எடுக்கிறார்களே, நாம் இதைவிட அதிகமாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற ஆத்திரம் பாரதிராஜாவுக்கு இன்னும் இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பாரதிராஜாவுக்கு கிடைக்கிறதோ இல்லையோ குழந்தை நட்சத்திரம் சாரலுக்கு பேசியவர்கள் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். அருவி படத்திற்கு எடிட்டிங்கில் நான் தான் உதவி செய்தேன். அதில் பார்த்ததற்கும் இந்த படத்தில் பார்ப்பதற்கும் அதிதி பாலன் வித்தியாசமாக தெரிகிறார். பாரதிராஜா உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கூட வெகு சிரத்தை எடுத்து டப்பிங் பேசியுள்ளார்” என்றுகூறினார்.
கலை இயக்குநர் மைக்கேல் பேசும்போது,
“வெட்டு, குத்து, துப்பாக்கி என்கிற கலாச்சாரம் சார்ந்து இன்று படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது” என்று கூறினார்.
தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் பேசும்போது,
“இது மாதிரி படங்கள் அமைவது அபூர்வம். இப்படம் பார்த்தபோது இடைவேளையின்போது ஏற்பட்ட தாக்கம் இப்போது வரை நீங்கவில்லை. பெரிய இயக்குநர்,
ஹீரோவின் படங்களுக்கு கமர்சியல் வெற்றி கிடைக்கிறது. ஆனால் இந்த சமூகத்திற்கு என்ன விஷயத்தை சொல்லப் போகிறார்கள் ?. பாசத்தை மட்டுமே மூலதனமாக வைத்து இந்த படத்தை கொடுத்துள்ளார் தங்கர் பச்சான். இந்தப்படத்திற்காக பாரதிராஜாவுக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்றால் தேசிய விருது கொடுப்பதையே நிறுத்தி விடலாம்.என்னுடைய இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவர் தங்கர் பச்சான். பாலச்சந்தர் இருந்திருந்தால் இப்போது தங்கர் பச்சானை கட்டிப்பிடித்து பாராட்டி இருப்பார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசும்போது இயக்குநர் ஜனநாதன் பற்றி பேச முடியாமல் கண் கலங்கினாரே, இந்த சினிமா உலகம் மட்டும்தான் நன்றி உணர்வு அதிகமாக உள்ள துறை” என்று கூறினார்.
நிகழ்வின் ஹைலைட்ஸ்
இன்று பாரதிராஜாவின் 84 வது ஒர்ஜினல் பிறந்தநாள் என்பதால் இயக்குநர் தங்கர் பச்சான் அவருக்கு பொன்னாடை அணிவித்து, ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்கிற இப்படத்தின் ஒர்ஜினல் சிறுகதை அடங்கிய புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.